Monday, November 3, 2008

விடுதலையே உதயம் ...


விடியல்
ஒளிக்கற்றைகள்
உன் விழிகளில்
இளைஞர்
படையணியினர்
உன் வழிகளில் ...

வளர்ந்த
உன் தாடிக்குள்
ஞானம் தேடும்
ஆட்சியாளர்கள்
கிழிந்த
உன் கால்சிலுவாரில்
பாடம் படிக்கும்
காவலர்கள் ...

உன்
உதயம்
கொடுமதியாளர்
கண்களைக்
கூசச் செய்துள்ளது ...

உன் மூர்த்தி
அவர்களது கீர்த்திக்கு
அபாய சங்கு
ஒலித்துள்ளது ...

உனக்கு தினம்
கஞ்சி தந்து
எடைக் குறைத்தார்கள்
மக்கள் மனதில்
உன்
எடை கூடச் செய்தார்கள் ...



உன் காலில் அணிவித்த
ஜப்பான் சிலிப்பரில்
அநீதியாளர்களின்
ஆணவம் நசுங்குகிறது ...

உன்னை
பித்தளை என
பல்லைப் பிடித்தார்கள்
நீ
சொக்கத் தங்கம்
என்றறிந்து
உடலைத் தேய்த்தார்கள் ...

உன்
சுதந்திரத்தைப் பறித்த
கொடுமதியாளர்
உன்
மருந்தையும் மறுப்பதில்
நியாயம் தேடுகிறார்கள்

அநீதி
ஆட்சி செய்யும்
இருண்ட நாட்டில்
உன் விடுதலை மட்டும்
மக்கள் ஏங்கும்
உதயமாகும்!

வாக்கு நமது போதிமரம்


சகோதரர்களே ...

நாம் என்ன
சீட்டெடுக்கும் கிளிகளா?
நெல்மணிகளை மட்டும்
வலுக்கட்டாயமாக - நம்
வாயில் திணிக்கிறார்கள் ...

நாம் என்ன
ரப்பர் மரங்களா?
நம்முடலில் எத்தனைமுறை
வாக்குப் பாலெடுக்கக்
கீறிக் கொண்டிருப்பார்கள் ...

நாம் என்ன
போதி மரமா?
தேர்தல் காலத்தில் மட்டும்
நம்முன் அமர்ந்து
ஞான தவமிருக்கிறார்கள்

நமது வீட்டுச் சுவர்களில்
தங்கள் வரலாற்றை
எழுதிச் சொல்பவர்
நம் உரிமை வாழ்வைப்
பின்தள்ளிச் செல்கிறார்கள்

நமது வாக்குகளால்
நாடாளுமன்றம் சென்றவர்கள்
நமது வீடு உடைபடுகையில்
நீலிக் கண்ணீர் வடிக்கவும்
முன் வராமல்
அரசு சட்டத்தின் பின்
ஒளிந்து கொண்டார்கள் ...

நாம்
அவர்கள் கையில்
கொடுத்ததோ அமுதசுரபி
அவர்கள்
நம் கையில் திணிப்பதோ
பிச்சைப் பாத்திரம் ...



நாம்
உரிமை போர் வாளை
அவர்களுக்கு கொடுத்தோம்
அவர்கள்
பட்டாக் கத்தியை
நம் தோழமைக்குப் பரிசளிக்கிறார்கள் ...

நமக்காக
இயற்றப்பட்ட நீதிச் சட்டங்கள்
நமது கழுத்துகளுக்குத்
தூக்குக் கயிறை கொண்டு வரும்
மாயாசாலம் யார் அறிவார்?

விரும்பும் மரக்கிளைகளில்
கூடு கட்டும் குருவிகள் ...!
ஒரு வீடு கட்டும்
அடிப்படை உரிமை
மண்ணின் மைந்தர்களுக்கு இல்லையா?

நம்மைப் பாதுகாக்க எழுந்த
நீதிச் சட்டங்கள் - இன்று
நமது கண்களில்
மிளகாய் பொடி தூவுகின்றனவே!

சமூகக் காவலர்களே
சன்மார்க்க
அரசியல் சேவையாளர்களே
எங்கள் ஓட்டுகளால்
நீங்கள் எசமானர்கள் ...

வாக்காளர்கள் இன்று
உங்கள்
வாய்பேசா செம்மறிகளா!

உன் திசையில் உலகத் திசை


உன்
கண்களில் உண்டு
எரிமலை

உன்
கைகளில் உண்டு
வல்லமை

அகிலத்தை
அசைக்கும் சக்தி
உன்
வார்த்தைகள்

உன் பின்
இளைஞர் படை திரட்சி
உன்னிலே
வெளிப்படும் பெரும் புரட்சி

சிறை என்ன சிறை
இன்று அது உன்
சின்ன அறை..
மக்கள் சக்தி - உன்
மிகப்பெரிய அறை...
இதய அறை!



மெல்ல எழுந்ததற்கே
இத்தனைக் கைவிலங்கு
பொங்கி நீ எழுந்தால்
சிதறுத் தேங்காயாய்
சிறுமதி ஆட்சியாளர்..

உன் திசை
வெற்றி தரும்
பெரும் திசை!
எல்லா திசையினரும்
தேடி வருவார்கள்
ஒருநாள்
உன் திசை...

விண்ணும் மண்ணும்
உன்
சிங்க மடியில்
வெற்றி மலர்களை இறைக்கும்

உனக்காக
வெற்றிப் பல்லக்கு
சுமந்திருக்கிறோம்

மனித உரிமைப் போராட்டச்
சுமைக் கூட
சுகம் தரும் சுமை!

Wednesday, October 29, 2008

உங்கள் சிந்தனைக்கு...


தாராளமயக் கொள்கை

இனவெறி
மதவெறி
பணவெறி
எங்கள்
ஆட்சிக்கானக் கொள்கை...

அராஜகம்
சர்வதிகாரம்
அடக்குமுறை
எங்களின்
எழுதப்படாத சாசனம்

ஊடகச் சுதந்திரம்
மக்கள் சுதந்திரம்
எங்கள்
நரி தந்திரத் தணிக்கை...

ஆட்சியில் அமர்த்திய
உங்களை
ஆட்டிப் படைப்பதே
எங்கள் முழுமுதற் சேவை...

***

யானைக் காது

நீதிக் கேட்டு
வீதியிலே
பாமரர்களின் கூக்குரல்...

உரிமைக் கேட்டு
ஒடுக்கப்பட்டவர்கள்
ஒப்பாரி...

ஏழைகளின்
புலம்பலோசைத்
திக்கெங்கும் ஒலிக்கிறது...

"எனக்கு
யானைக் காது"...
என்ற பிரதமர்
செவிடராய் கும்பகர்ணன்!

***

இடைத்தேர்தல்

இத்துப் போன
பலகை வீடு
இளிச்சபடி இருக்க

பித்துப் பிடித்தச்
சொந்தக்காரன்
தீ வைத்தான்...

"அய்யோ... அய்யய்யோ
இருக்குற ஒடச்சல் வீட்ட
நெருப்புக்கு தர்றீயே
நீ என்ன பைத்தியமா?"
அலறினாள் பொண்டாட்டி...

"போடீ
போக்கத்தவளே
நடுரோட்டுல போய்
ஒப்பாரி வை.."

இடைத்தேர்தல்
வந்துருச்சி!!!

எழும் நேரம்..

இது
எழும் நேரம்!

வீழ்ந்த
உரிமைகளைப் பிடித்துயர்த்தி
சனநாயக முரசு
ஒலிக்கும் நேரம்!

இது
சமூக விடுதலைக்கான நேரம்!
காத்திருந்தால்
கண்போல் காத்த
கொள்கைகள்
பறிபோகும் நேரம்!

அக்கினி நாவுகள்
விச வார்த்தைகளைக்
கக்குகின்றன..
இனவாதப் பாம்புகள்
சுய சட்டைகள்
உரித்தாடும் தந்திர நேரம்!

இதுவரை
அழகுக்காய் அணிந்த
அச்ச சட்டைகளைக் கிழித்தெறிந்து
வீர ஆடைகளை
உடுத்தும் நேரம்!

பிறப்பது
ஒருமுறைதான் என்றாலும்
இறப்பதும் ஒருமுறைதான் - என
வேள்வித் தீயில்
உயிர் துறக்கும் நேரம்!

நமது
சன்மார்க்க நீதிக்கு
சாவுமணியடித்த ஆட்சிக்கு
நம் சாதனை மரணம்... வீரம்!
தருக்கர் நெஞ்சை
சண்டமாருதம் செய்யும் தூய நேரம்!

வீசிப்போகும் புயலைக்
கையில் பிடித்து
ஊசிப்போன ஆட்சியை
மரண ஊஞ்சலில்
தாலாட்டும் நேரம்!

பறிபோன உரிமைகளைப்
பாதகர் கைகளிலிருந்து
பறித்தெடுக்கும் வினாடியில்
நம் உயிர்
பறி போகும் நேரம்!

கொதி எரிமலையின்
உச்சியில் நின்று
எரி குழம்பைக் கையில் ஏந்தி
ஊழல் அரசியலைச்
சாம்பலாக்கும் அக்கினி நேரம்!

வீணர் ஆட்சியில்
சிறைப்பட்டச் சுதந்திர உணர்வை
மீட்டெடுக்கும் சத்தியப் போரில்
வீரக் காவியமாகும் நேரம்!

இருட்டு அரசியல் பூதத்தின்
தலையறுத்து
மெழுகுவர்த்திகள் ஏந்தி
வெற்றி ஊர்வலம் வரும் நேரம்...

இது
நமக்கான நேரம்!
நெருப்பு நதியில்
நீந்தி வர
காலம் தள்ளி விட்ட
கார்கால நேரம்!

கவிஞர் பிரான்சிசு
மால்மோ, சுவீடன்
khileefrancis@yahoo.com

Friday, October 17, 2008

தடை


இது
மக்கள் அரசா
மாக்கள் அரசா?

ஏழைத் தமிழர்களின்
அடிப்படை உரிமைகளை
உலையில் வைத்து
திருவிழா கொண்டாடும்
மாயாசால அரசு
மக்கள் அரசா
மாக்கள் அரசா?

காட்டு தர்பார் ஆட்சி
கன கச்சிதமாய்
கடைவிரிக்கப்பட்டுள்ளதின்
கண்றாவி அடையாளம்
'இண்ட்ராஃப்' இயக்கத் தடை!
சமாதானப் புறாக்கள்
எழுப்பியக் கேள்விகளுக்கு
என்னதான் விடை!
பதிலாகத் தருகிறார்கள்
வில்லோடு வரும்
போலீஸ் வில்லாளர் படை!

சன்மார்க்க நெறியின்
நியாய உரிமைகளைச்
சமாளிக்கத் திராணியற்ற
சகுனி அமைச்சர்கள்
சர்வாதிகாரத் தடையுத்தரவை
அதிகாரக் கைகளில்
ஞானப் பழமாய் ஏந்தினார்கள்

எளியர்களின்
குரல்வளை நெறித்து
அரசியல் சாணக்கியர்களின்
ஆடம்பர விருந்துகளில்
இன்ப கீதங்கள் பாடும்படி
கட்டளையிடுகிறார்கள்...

அடக்கப்பட்டவர்கள்
அலைகடலாய் பொங்கியபோது
சிறுபுல் தடுக்கி விழுந்த
மந்திரிமார்கள்
மாந்தரீகத் தாயத்துகள் அணிந்து- இன
மாயைத் தடை போட்டார்கள்...

நாங்கள்
மக்கள் அரசல்ல
மாக்கள் அரசு
மாசுநிறை அரசு என்பதை
மாசில்லா உலகிற்கு
நிரூபணம் செய்தார்கள்!

தங்கள்
பற்களின் மஞ்சள் கறையைப்
பசை கொண்டு தேய்க்க
சோம்பல் கொண்டவர்கள்
பாயும் உரிமைப் புலியின்
பல்லைப் பிடுங்க
"திருப்புளி" சட்டம் ஏந்தினார்கள்

தென்றல் கன்னியைத்
தங்கள் படுக்கையறைகளில்
தாராளமாக நுழைய விட்டவர்கள்
சூறாவளியாய் எழுந்தவர்களைச்
சிறைக் காட்டிற்கு அனுப்ப
காவலர் கைகளைக்
கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

அதிகாரப் போதையில்
ஆட்சிக் கட்டிலில்
படுத்துறங்கும் கும்பகர்ணர்கள்
எழுச்சி பெற்ற மக்கள்
வீழ்ச்சியடைய
மீளா யாகம் வார்க்கிறார்கள்...

"இண்ட்ராஃப்"
இரண்டொருவர் அல்ல
இலட்சம் இலட்சமாய்
படை திரண்ட
இலட்சியப் போராளிப் பாசறை

ஆயிரம் தடைகளைத்
தாண்டி முன்னேற
ஆயிரம் ஆயிரமாய்
பொங்கி எழும் புதுப்புனல்

தருக்கர் ஆட்சியின்
தடையுத்தரவில் அஞ்சி
மூங்கில் காட்டில் பதுங்கி ஒளியும்
சிறு நரியல்ல...
வேட்கையுடன் பாயும்
வேங்கை "இண்ட்ராஃப்"!